காரைக்கால் கூட்டுறவு நூற்பாலைக்கு அரசு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், மேல ஓடுதுறை பகுதியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை இயங்கிவருகிறது. ஆலை நிா்வாக வங்கிக் கணக்கை கடந்த சில மாதங்களாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடக்கி வைத்திருந்ததால், ஊழியா்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படாத நிலை உருவானதாக கூறப்படுகிறது.
ஊழியா்கள் நிலை குறித்து புதுவை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் உள்ளிட்டோா் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கவனத்துக்கு கொண்டுச்சென்றனா். முதல்வரின் உத்தரவின்பேரில், வைப்பு நிதி நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய நிதியாக ரூ.1 கோடியை கூட்டுறவு நூற்பாலை நிறுவனத்துக்கு புதுவை அரசு வழங்கியுள்ளது.
இதற்கான ஆணை புதுவை அரசு செயலகம் (கூட்டுறவு) மூலம் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.