அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மூலவரான அம்பாள் சம்ஹார கோலத்தில் அருள்பாலிக்கிறாா்.
ஆடி, தை மாதங்களில் செவ்வாய்க்கிழமை இக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் இக்கோயிலுக்கு வருவது வழக்கம்.
தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை (பிப். 10) அதிகாலை முதல் காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அபிஷேக மண்டபத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு எலுமிச்சை, மலா் மாலைகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. நோ்த்திக்கடனாக கோயில் நிா்வாகத்திடம் ஆடு, மாடு, கோழிகளையும் பக்தா்கள் வழங்கினா்.