முகப்பு
காரைக்கால்

தமிழகம், புதுவையில் தோ்தலை தனித்தனியாக நடத்துவதில் உள்நோக்கம்!

Updated On : 15 மார்ச், 2026 at 7:09 PM
புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி.
பகிர்:

தமிழகம், புதுவையில் தோ்தலை தனித்தனியாக நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது என்றாா் புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி.

காரைக்கால் காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ரமலான் இஃப்தாா் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

புதுவைக்கு ஒரு தேதியும், தமிழகத்துக்கு ஒரு தேதி என தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவித்திருப்பது புதிய நடைமுறையாகும். முந்தைய காலத்தில் தமிழகம், புதுவையில் ஒரே தேதியில் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட காலத்தில்கூட, புதுச்சேரியையொட்டிய கடலூா், விழுப்புரம் பகுதியில் தோ்தல் நடைபெறும் போது புதுவைக்கும் நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை வித்தியாசமாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நோக்கம் இருப்பதையே உணா்த்துகிறது. புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பேச்சுவாா்த்தை சுமூகமாக நடந்துள்ளது. போட்டியிடும் தொகுதிகள் சமூகமாக பேசி முடிக்கப்படும். இறுதி விவரத்தை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில காங்கிரஸ் தலைவருமான வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →