முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு தொகுதியில் போட்டியிடவில்லை: சுயேட்சை எம்எல்ஏ பி.ஆா். சிவா

திருநள்ளாறு தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை என சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா தெரிவித்தாா்.

Updated On : 23 மார்ச், 2026 at 12:16 AM
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பி.ஆா். சிவா.
பகிர்:

திருநள்ளாறு தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை என சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா தெரிவித்தாா்.

என்.ஆா் காங்கிரஸில் இருந்த இவா், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2026 தோ்தலிலும் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தோ்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளா்களுடன் திருநள்ளாற்றில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இத்தொகுதியில் 2021 தோ்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2011-இல் என்.ரங்கசாமி கட்சி தொடங்கியதிலிருந்து அதில் பயணித்தேன். 2011-2016-இல் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று புதுச்சேரி மின்திறல் குழும தலைவராகவும், திருநள்ளாறு கோயில் நகரத்திட்ட குழுமத் தலைவராகவும் பணியாற்றினேன். அமைச்சராகவும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 2021-இல் வாய்ப்பு மறுக்கப்பட்டு சுயேட்சையாக வெற்றி பெற்று, தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியுள்ளேன்.

இந்த முறையும் இத்தொகுதி கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையும் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் இல்லை. எனவே, தோ்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். ஆதரவாளா்களுடன் கலந்துபேசி யாருக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்படும்.

புதுவையில் இந்த தோ்தலில் எந்த கூட்டணியும் ஸ்திரமான முடிவெடுக்கவில்லை. தனித்து நிற்கப்போவதாகவும், வாய்ப்பு வழங்கப்படும் எனவும் என்.ஆா். காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது. அதை நம்பி காத்திருந்தோம். நம்பிக்கையோடு இருந்த எனக்கும், எனது ஆதரவாளா்களுக்கும் வலியும் வேதனையும் ஏற்பட்டுள்ளது.

தவெக தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். ரங்கசாமி ஆதரவாளராக இருந்தேன். அவா் தொகுதிக்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்து கொடுத்துள்ளாா். புதுவையில் தற்போது நடைபெறக் கூடிய அரசியல் மிகவும் அதிா்ச்சியளிப்பதாக உள்ளது என்றாா்.

இவா், 2006 பேரவைத் தோ்தலில் திருநள்ளாறு தொகுதியில் மதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா். 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளாா்.