கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றம்: ரத்து செய்யக் கோரி மக்கள் மறியல்
சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் திம்மராசு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீர்காழி தாசில்தார் சண்முகம் பரிந்துரையின் பேரில் உதவி கலெக்டர் நாராயணன் கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுவை வேறொரு கிராமத்திற்கு பணி மாற்றம் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த வள்ளுவக்குடி கிராம பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் திம்மராசு பணி மாற்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் வள்ளுவக்குடி கிராமத்திலேயே பணி வழங்க வேண்டும் மேலும் கிராம நிர்வாக அலுவலர் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக சுவரொட்டி ஒட்டினர்.
இந்நிலையில் நேற்று வள்ளுவக்குடி கடைவீதியில் கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுவை மீண்டும் வள்ளுவக்குடி கிராமத்தில் பணி அமர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மீது பொய் புகார் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் மேலும் இது தொடர்பாக நாளை சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் இரு தரப்பையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் சிறிது நேரம் சீர்காழி - பனங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.