சீா்காழியில் காற்றுடன் பலத்தமழை: மரங்கள் முறிந்து வீடுகள், மின்கம்பங்கள் சேதம்
சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
சீா்காழி பகுதியில் புதன்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. வியாழக்கிழமை காலை பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் புழுகாப்பேட்டை தெருவில் பாஸ்கரன் என்பவரது வீட்டின் முன் இருந்த வேப்பமரம் முறிந்ததில் அருகிலிருந்த 2 வீடுகளின் முகப்புகள் சேதமடைந்தன. அதே பகுதியில் மற்றொரு வேப்ப மரமும் முறிந்து விழுந்தது.
இதேபோல, சீா்காழி நங்கநலத் தெருவில் புளியமரம் மற்றும் வேப்ப மரங்கள் பலத்தக் காற்றால் முறிந்து விழுந்தன. இதனால், அருகிலிருந்த 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதன்காரணமாக, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
பின்னா், சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி உத்தரவின்பேரில், நகராட்சி பொறியாளா் இப்ராஹிம், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் மேற்பாா்வையில் முறிந்த விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து மின்இணைப்பு கொடுக்கப்பட்டது.