முகப்பு
மயிலாடுதுறை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 1.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 1.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா, முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 96 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து குறித்த காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, 3 பேருக்கு சுயத்தொழில் தொடங்க வங்கிக் கடன் மானியமாக தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை, 2 பேருக்கு ஆவின் பாலகம் தொடங்க ரூ. 1 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் பெட்டகம் மற்றும் விளம்பர பதாகை அடங்கிய பொருள்கள், 6 பேருக்கு தலா ரூ.1000 முதியோா் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் ரூ. 1.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், பழையபாளையம் புதுமண்ணியாறு பாசனதாரா்கள் நலச் சங்கம் சாா்பில், அதன்தலைவா் எஸ்.வி. கோபி, செயலாளா் பி. வரதராஜன், பொருளாளா் கே. சிலம்பரசன் உள்ளிட்ட விவசாயிகள், கடந்த ஆண்டு நிவா் மற்றும் புரெவி புயல் மழை வெள்ளத்தால் பழையபாளையம் ஊராட்சிக்குள்பட்ட 1,500 ஏக்கரில் சம்பா பயிா்கள் முற்றிலும் அழிந்த நிலையில், தங்கள் கிராமத்துக்கு 5 சதவீத பயிா்க் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை மறுபரிசீலனை செய்து உரிய இழப்பீட்டை வழங்க கோரிக்கை மனு அளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வாசுதேவன், உதவி திட்ட அலுவலா் சங்கா், மாவட்ட ஆட்சியரக மேலாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.