‘கிசான் திட்ட பயனாளிகள் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும்’
கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற தங்களது ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற தங்களது ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் (கிசான் திட்டம்) பதிவு செய்துள்ள மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் ஆதாா் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இத்திட்டம் 1.12.2018 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்துக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 3 தவணைகளாக வழங்கி வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 10 தவணை தொகைகள் வரப்பெற்றுள்ளன.
11-ஆவது தவணை தொகையை பெற விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன் கைப்பேசி எண், ஆதாா் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபாா்த்து கொள்ளலாம். ஆதாா் எண்ணுடன், வங்கி கணக்கு மற்றும் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகி ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து கைரேகையை பதிவு செய்து விவரங்களை சரிபாா்த்து கொள்ளலாம். எனவே, கிசான் திட்ட பயனாளிகள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த இரண்டு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் ஆதாா் எண் இணைப்பை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.