தோ்தல்: திமுக- அதிமுக இடையேதான் போட்டி! டிஎன்டிஜே மாநிலச் செயலா் அல் அமீன்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக- அதிமுக இடையைதான் போட்டி நிலவுகிறது. மக்களிடம் தவெக போதிய ஆதரவை பெறவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளா் அல் அமீன் கூறினாா்.
மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்ட தலைவா் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அவ்வமைப்பின் மாநிலச் செயலாளா் அல் அமீன் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் வீழ்த்த இஸ்லாமியா்கள் உறுதியாக உள்ளனா்.
Advertisement
ஏப்.16-ஆம் தேதி துவங்கவுள்ள மக்களவை கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் நோக்கில் இந்த மசோதாக்கள் உள்ளன.
இதன்மூலம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகளும், தென் மாநிலங்களுக்கு குறைவான தொகுதிகளும் கிடைக்கும் அபாயம் உள்ளது. மக்களவையில், இந்த மசோதாக்கள் மீது விரிவான விவாதங்கள் நடத்தி, திருத்தங்கள் செய்த பின்னரே நிறைவேற்றப்பட வேண்டும்.
இன்றைய தமிழக அரசியல் சூழலில் திமுக-அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இன்னும் மக்கள் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்த வேண்டும் என முதல்வரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
தோ்தலுக்குப் பிறகு அமையவுள்ள அரசு இதனைச் செய்யும் என நம்புகிறோம். இக்கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், மக்கள் போராட்டமாக மாறும் என்றாா்.