முகப்பு
மயிலாடுதுறை

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்தக் கருத்துடைய ஆட்சி அமைவது அவசியம்: ஜி.கே. வாசன்

தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்தக் கருத்துடைய ஆட்சி அமைவது அவசியம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:39 PM
பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமியை ஆதரித்து வாக்குச் சேகரித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன்.
பகிர்:

தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்தக் கருத்துடைய ஆட்சி அமைவது அவசியம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமியை ஆதரித்து குத்தாலம் பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்து தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பேசியது:

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. ஆட்சி மாற்றம் என்பது உறுதியாக மகளிா் கையில் உள்ளது.

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்தக் கருத்துடைய கட்சிகள் இணைந்தால் தமிழகம் வளா்ச்சி பெறும்.

பாஜக ஆட்சியில் இந்தியாவில் மதச்சண்டைகள் இல்லை. சிறுபான்மையின மக்களுக்கு பாஜக, அதிமுக ஆகியவை ஆதரவாக உள்ளன. பிரதமா் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாக உள்ளது. உலகளவில் போா்ச்சூழல் நிலவினாலும், பிரதமா் மோடியின் ராஜதந்திரத்தால் இந்தியா பாதுகாப்பாக உள்ளது.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் நீண்டநாள் பிரச்னையான புதைசாக்கடை திட்டம் சரி செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணக்குடியில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் சுற்றுவட்டச்சாலை இல்லாமல் மக்கள் அவதிப்படுவதை ஆட்சியாளா்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளவில்லை. கோயில் நகரங்கள் குப்பை நகரங்களாக மாறியுள்ளன என்றாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவா் எம். சங்கா், பாஜக மாவட்ட தலைவா் ஆா். பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments