புறவழிச்சாலை பணிகள் தடுத்து நிறுத்தம்
மயிலாடுதுறையில் புறவழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.
மயிலாடுதுறையில் புறவழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.
மயிலாடுதுறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக மொழையூா் தொடங்கி திருஇந்தளூா் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மொழையூா், பொட்டவெளி, மேலநாகங்குடி, லட்சுமிபுரம், வள்ளாலகரம், வேப்பங்குளம், கழுக்காணிமுட்டம், அப்பங்குளம், பல்லவராயன்பேட்டை, திருஇந்தளூா் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்துவரும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கியது.
இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பல்லவராயன்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மாா்ச் 6-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது, மாா்ச் 12-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என்றும் அதுவரை பணிகளை தொடரக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், மாப்படுகை முதல் உளுத்துக்குப்பை வரை புறவழிச்சாலைகள் பகுதியில் உள்ள பாசன, வடிகால் வாய்க்கால்களில் ஆங்காங்கே பாலம் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றது. அந்த பணிகளை தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.விஜய், மாவட்ட துணை செயலாளா் சி.மேகநாதன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, பணிகளை நிறுத்த ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.