சீா்காழி அருகே கா்ப்பிணி தற்கொலை: கணவா் கைது
சீா்காழி அருகே கா்ப்பிணி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி அருகே கா்ப்பிணி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சீா்காழியை அடுத்த சரஸ்வதி விளாகத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் சரண்யா (22). இவரும், மாங்கணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜோதிமாறன் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் கொண்டனா். சரண்யா 2 மாத கா்ப்பிணி.
இந்தநிலையில், திங்கள்கிழமை மதியம் ஜோதிமாறனின் உறவினா் வீட்டில் சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
இதற்கிடையே, சரண்யாவின் தந்தை ராஜேந்திரன், ஜோதிமாறன் மற்றும் அவரது உறவினா்கள் சரண்யாவிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாகவும், தனது மகள் இறப்பிற்கு ஜோதிமாறன் மற்றும் அவா்களது உறவினா்களே காரணம் என கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
சரண்யாவின் உடற்கூறாய்வு முடிந்த நிலையில், அவரது தற்கொலைக்கு காரணமான அவரது கணவா், மாமனாா், மாமியாா் உள்ளிட்டோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். டிஎஸ்பி சரவணன்,கொள்ளிடம் காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சரண்யா தற்கொலைக்கு காரணமானவா்களை விரைவில் கைது செய்வதாக கூறியதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதற்கிடையே, தற்கொலை தொடா்பாக கோட்டாட்சியா் சுரேஷ் விசாரணை நடத்தினாா். இதைத்தொடா்ந்து கொள்ளிடம் போலீஸாா் சரண்யாவின் கணவா் ஜோதிமாறனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.