சீர்காழி அருகேயுள்ள பூம்புகார் கடற்கரையில் கல்லூரி மாணவியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த காதலன், காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை சரணடைந்தார்.
சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மதன்ராஜ் (22). மீனவரான இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதிக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்வது வழக்கம். அப்போது, அங்குள்ள மணல்மேல்குடி, செல்லநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோ. துர்க்காவுடன் (18) பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். துர்க்கா, சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.ஆர்க் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், மயிலாடுதுறைக்கு வந்த துர்க்கா, சென்னை செல்வதற்காக மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மதன்ராஜ் துர்க்காவை பூம்புகார் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் கடற்கரையோரம் உள்ள கற்குவியலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வதாகக் கூறி துர்க்காவை மதன்ராஜ் கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதன்ராஜ், அருகிலிருந்த கருங்கல்லைத் தூக்கி துர்க்கா தலையில் போட்டு, அவரை கொலை செய்ததாகத் தெரிகிறது.
பின்னர், பூம்புகார் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை மதன்ராஜ் சரணடைந்தார். போலீஸார், துர்க்காவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.