மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயிலின் கடைமுகத் தீர்த்தவாரி விழா வியாழக்கிழமை (நவ. 16) நடைபெறவுள்ளதையொட்டி, பக்தர்கள் புனித நீராட காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தேசியக் குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தின் சிறப்புமிக்க ஆன்மிக விழாக்களில் ஒன்றான மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் துலா உத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கடைமுகத் தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வடக்கிழக்குப் பருவ மழை காரணமாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. எனவே, கல்லணை மற்றும் திருவிசநல்லூர் மதகணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாஜக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், விசுவ இந்து பரிஷத் மாநிலப் பொறுப்பாளர் வாஞ்சிநாதன் ஆகியோருடன் மயிலாடுதுறை சார் ஆட்சியர் பா.பிரியங்காவை சந்தித்து, கடைமுகத் தீர்த்தவாரி விழாவுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.