மாற்றுத்திறன் பள்ளி சிறார்களுக்கு புத்தாடை
வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனுடைய சிறார்களுக்கான பகல் நேரப் பாதுகாப்பு
வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனுடைய சிறார்களுக்கான பகல் நேரப் பாதுகாப்பு மையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்.எஸ். அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் சிறார்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாற்றுத் திறனுடைய சிறார்களுடன் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. உதவித் தொடக்க கல்வி அலுவலர் எம்.கே. இராமூர்த்தி தலைமை வகித்தார். கூடுதல் கல்வி அலுவலர் கே. ராஜமாணிக்கம், அனைவருக்கும் கல்வித் திட்ட வளமைய மேற்பார்வையாளர் பெனடிக் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேதாரண்யம் எஸ்.எஸ். அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு, சிறார்களுக்கு இலவச உடைகள், இனிப்புகள் வழங்கினார். அறக்கட்டளை செயலாளர் மல்லிகா தென்னரசு, தலைமையாசிரியர்கள் புயல் சு. குமார், அ. செல்வராணி, வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர்கள் சீனிவாசன், நமசி.அனந்தராசு, சிறப்பாசிரியர்கள் கே. சாந்தி, கே.எம். சாந்தி, ஆனந்தவல்லி, அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.