நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நடைபெறவுள்ள காவிரி மகா புஷ்கரம் விழாவுக்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம்-2017 திருவிழா செப். 12 முதல் 24 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் புனித நீராடுவதற்கு ஏற்ற வகையில், துலாக்கட்ட காவிரியில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், துலாக்கட்ட காவிரி பொலிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நடைபெற்றுள்ள பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி மகா புஷ்கரம் விழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள், தங்குவதற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காவிரி புஷ்கரம் விழா தொடக்க நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் பி. செந்தில்குமரன், உதவிப் பொறியாளர் சங்கர் மற்றும் காவிரி புஷ்கரம் விழாக் குழுவினர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.