பழுதடைந்த நிலையில் ஆனந்தக்கூத்தன் ஊராட்சி பள்ளிக் கட்டடம்
சீர்காழி அருகேயுள்ள ஆனந்தக்கூத்தன் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் அவலம் நிலவுகிறது.
சீர்காழி அருகேயுள்ள ஆனந்தக்கூத்தன் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் அவலம் நிலவுகிறது.
நாகை மாவட்டம், ஆனந்தக்கூத்தன் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 88 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2006-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தில், கடந்த ஆண்டு பெய்த மழையின்போது மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்தது. இதனால், வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரூ.65 ஆயிரம் செலவில் கட்டடம் சீரமைக்கப்பட்டது. எனினும், இதனால் எந்த பலனும் இல்லாமல் போனதால், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மாணவர்களைக் கட்டடத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, பள்ளிக் கட்டடம் பூட்டப்பட்டு, மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில், மரக்கிளைகள் மாணவர்கள் மீது முறிந்துவிடுமோ என்ற அச்சத்தில், நாள்தோறும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதாகப் பெற்றோர் மனம் குமுறுகின்றனர்.
அத்துடன், திடீரென்று மழை வந்தால் மாணவர்கள் அனைவரையும் பள்ளி வளாகத்திலுள்ள சிறிய அங்கன்வாடி கட்டடத்தில் அடைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த அவலநிலையைப் போக்க அரசு துரிதமாகச் செயல்பட்டு, கோடை விடுமுறையில் புதிய தரமான கட்டடத்தைக் கட்ட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.