பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள, தகுதியான பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளைகள் வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மயிலாடுதுறை வட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள ஏழை, எளிய தகுதியான பயனாளிகளுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு உருளைகள் ஏப்.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
இதையொட்டி, பயனாளிகள் தேர்வுக்கான கணக்கெடுப்புப் பணி மயிலாடுதுறை வட்டத்தில் மறையூர், கோடங்குடி, பட்டவர்த்தி, கேசிங்கன் உள்ளிட்ட 23 கிராமங்களில் நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகையால், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள, தகுதியானவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள எரிவாயு விற்பனை முகவர்களைத் தொடர்புகொண்டு மேலும் தகவல்களை அறிந்து பயனடையலாம் என வட்டாட்சியர்து. விஜராகவன் தெரிவித்தார்.