முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவையொட்டி, திருக்கடையூரில் பாஜக சார்பில் மௌன ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற இந்த ஊர்வலத்துக்கு நாகை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அமிர்த விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் பாலாஜி குருக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைராஜன், பாமக ஒன்றியச் செயலாளர் சபரிநாதன், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் என்.ஜி.கலியப்பெருமாள், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலியப்பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருக்கடையூர் மெயின்ரோடு, கடைதெரு வழியாக சன்னதி தெரு வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அங்கு வாஜ்பாய் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பொறையாறு, ஆக்கூர், செம்பனார்கோவில், சங்கரன்பந்தல் ஆகிய பகுதிகளில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.