அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்
வேதாரண்யத்தில் அரசுப் பேருந்தில் பயணிகளிடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விட்ட நடத்துநர் திங்கள்கிழமை இரவு தாக்கப்பட்டார்.
வேதாரண்யத்தில் அரசுப் பேருந்தில் பயணிகளிடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விட்ட நடத்துநர் திங்கள்கிழமை இரவு தாக்கப்பட்டார்.
வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செளரிமுத்து (38). இவர் வேதாரண்யம் - நாகப்பட்டினம் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வேதாரண்யத்தில் இருந்து நாகை புறப்பட்ட பேருந்தில் பணியில் இருந்தார். பேருந்து, நாகை சாலையில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆண் பயணிகள் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விடச் சென்றார்.
அப்போது, தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பயணிகள் சௌரிமுத்துவை தாக்கியதில் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சௌரிமுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.