குளிர்பானக் கடையில் மிரட்டி பணம் பறித்தவர் கைது
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் குளிர்பானக் கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் குளிர்பானக் கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையைச் சேர்ந்தவர் பா. சிவக்குமார் (34). குளிர்பானங்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை கடையில் இருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.2,500-ஐ அவரிடம் இருந்து பறித்துச் சென்றாராம். அப்போது, அங்கு ரோந்து பணியிலிருந்த போலீஸார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் மேற்கு மாதாக்கோயில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமரன் (34) என்பது தெரியவந்தது. போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.