புதிய காவல் நிலையம் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்குள்பட்ட பழுதடைந்த பெரம்பூர் காவல் நிலையத்தை அகற்றிவிட்டு, புதிய காவல்
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்குள்பட்ட பழுதடைந்த பெரம்பூர் காவல் நிலையத்தை அகற்றிவிட்டு, புதிய காவல் நிலையம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பூர் காவல் நிலைய வரம்பெல்லைக்குள் திருவிளையாட்டம், கொத்தங்குடி, நல்லடை, சேத்தூர், வழுவூர், மங்கநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
இந்த காவல் நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் நிலையத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
அத்துடன், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கசிவதால் காவலர்களும், புகார் அளிக்க வரும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இதன் காரணமாக காவலர்கள் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிமாக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான இடவசதி கிடையாது. ஆகையால், பழைய காவல் நிலையக் கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டு, புதிய கட்டடம் கட்ட சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.