கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு: நகராட்சி ஆணையர் ஆய்வு
நாகை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்து, சீரமைக்க
நாகை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்து, சீரமைக்க அறிவுறுத்தினார்.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மழைநீர் எளிதில் வடியும் வகையில், சிறுபாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக, அந்த பாலத்தில் தண்ணீர் உள்வாங்காமல், சாலையில் தேங்கியது. இதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள சாக்கடைகள் அன்றாடம் சுத்தம் செய்யப்படாதது தான் எனக் கூறப்படுகிறது.
இதையறிந்த நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின், சாக்கடைக் கழிவுகள் தேங்கிநிற்கும் பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், கழிவுநீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய துப்புரவுப் பணியாளர்களை அறிவுறுத்திய அவர், பணிகளைத் துரிதப்படுத்தினார்.
ஆய்வின்போது, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மோகன், தனியார் துப்புரவு ஒப்பந்ததாரர் ஞானவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.