கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் கால்நடைகளுக்கான 15-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் செப்.21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேதாரண்யம் நகராட்சிப் பகுதிகளில் 21 வார்டுகளில் 4,950 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வேதாரண்யேசுவரர் கோயில் கோ சாலையில் உள்ள பசு மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சுப்பையன், மீனாட்சிசுந்தரம், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் வனிதா உள்ளிட்ட குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஆயிரம் கால்நடைகளுக்கு 4 குழுக்கள் மூலம் தடுப்பூசி போட திட்டமிடப்படுள்ளது. இதை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.