சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். இக்கோயிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகிஅம்மன், பழனி ஆண்டவர், செல்வமுத்துக்குமார சுவாமி, சண்முகநாதர், மூலவர்அங்காரகன், உத்ஸவர் அங்காரகன் சன்னிதி என 7 இடங்களில் கோயில் சார்பாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை கோயிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் விசாரணை கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. ரூ. 2 ஆயிரம், ரூ.500, ரூ.100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10, ரூ. 5 என நோட்டுகள், சில்லறை காசுகள் தனித்தனியாக சல்லடைகள் மூலம் பிரிக்கப்பட்டன. அவற்றை கோயில் பணியாளர்கள், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவிகள் ஆகியோர் எண்ணும் பணியை மேற்கொண்டனர். அதேபோல், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம், வெள்ளிசரடுகள், கை, கால், உடல் வடிவமைப்புகள் ஆகியவையும் சேரிக்கப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டன. தற்போது பிரமோத்ஸவம் நிறைவடைந்துள்ளதால், அதிகளவு காணிக்கை இருந்ததாக கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர்.