சீர்காழியில் புதிதாக கட்டப்பட்ட கிளை சிறைச்சாலையை வியாழக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி. கே. பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நாகை மாவட்டம், சீர்காழி காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பழைமையான கிளைச் சிறைச்சாலைக்கு புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ரூ.53.27லட்சத்தில் 5 கைதிகள் அறை, கண்காணிப்பாளர் அறை, வராண்டா ஆகியவற்றுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணி நிறைவடைந்து 8 மாதங்களாகியும் திறக்காததால் உடனடியாக திறக்க பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையில், சீர்காழி புதிய கிளைச்சிறை கட்டடத்தை வியாழக்கிழமை சென்னையிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதையடுத்து, சீர்காழி கிளை சிறை கண்காணிப்பாளர் ஆர். குமார், பணியாளர்கள் வழக்குரைஞர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். வழக்குரைஞர்கள் நெடுஞ்செழியன், ஜூலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.