நாகையில் "ஆபரேஷன் ஆம்லா' ஒத்திகை நிகழ்ச்சி
கடலோரக் காவல்படை சார்பில், நாகையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத ஊடுருவல் தடுப்பு
கடலோரக் காவல்படை சார்பில், நாகையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத ஊடுருவல் தடுப்பு (ஆபரேஷன் ஆம்லா) ஒத்திகை நிகழ்ச்சியில், கடல் மார்க்கமாக ஊடுருவ முயன்ற 7 பேரை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடலோரப் பாதுகாப்புப் படையினர், கடற்படை மற்றும் போலீஸார் ஒருங்கிணைந்து, ஆண்டுதோறும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, நாகை மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 51 கடலோர கிராமங்களில், 16 இடங்களில் இந்தத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாகூரில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடல்மார்க்கமாகச் சென்று நாகை பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதியைத் தகர்க்க திட்டமிட்டிருந்த 7 கமாண்டோ படை வீரர்களை ரோந்து போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இதுகுறித்து கடலோர காவல்படை ஆய்வாளர் ராஜா கூறுகையில், கடலோரக் காவல்படை மற்றும் நாகை மாவட்ட போலீஸார் ஒத்துழைப்புடன் ஜன.22, 23-ஆம் தேதிகளில் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளிலும், 51 கிராமங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. 60 கடலோரக் காவல் படையினர், 350-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். புதன்கிழமை (ஜன. 23) பிற்பகல் வரை ஒத்திகை நடைபெறும் என்றார் அவர்.