வைத்தீஸ்வரன்கோயிலில் பக்தர்களை தொந்தரவு செய்யும் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை
சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் குரங்குகளை பிடித்து
சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள பிரசித்திப் பெற்ற வைத்தியநாத சுவாமி கோயில் செவ்வாய்க்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள மரங்களில் அமரும் குரங்குகளுக்கு வாழைப் பழங்கள் தருவது வழக்கம். அவ்வாறு பழங்கள் தின்று பழக்கமானதால் வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோயில் கிழக்கு கோபுரவாசல் அருகே அமர்ந்திருக்கும் குரங்குகள் சில நேரங்களில் பக்தர்களிடமிருந்து பழங்களை பிடுங்கி சாப்பிடுகிறது. இந்த குரங்குகள் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் உள்ள பகுதிக்கும் சென்று உணவு கிடைக்குமா என சுற்றி வருகிறது.
அவ்வாறு வீடுகளில் சில நேரங்களில் மக்கள் அசந்திருக்கும்போது உணவுப் பொருள்களை பாத்திரம், டப்பாக்களுடன் எடுத்துச் சென்று விடுகிறது. குரங்குகளின் தொந்தரவினால் பொதுமக்கள், பக்தர்கள் சிலநேரம் அச்சமடைந்து சாலையில் திடீரென குறுக்கே ஓடும் சூழ்நிலை ஏற்படுவதால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தாமல் சாலைகள், கோயில்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.