அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடியைக் கட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீர்காழி காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் காவல் துறையினர் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, காவல் ஆய்வாளர் சிங்காரவேலு கூறியது:
வேட்பாளர்களோ, அவருக்காக பிரசாரம் செய்ய வரும் தலைவர்களோ அல்லது திரைத்துறையினரோ பிரசாரம் செய்ய வரும்போது காவல்துறை மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று, உரிய பாதுகாப்புடன் பிரசாரம் செய்ய வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரசனை ஏற்படக்கூடிய இடங்களில் உயர் அதிகாரிகளின் உத்தரவு பெற்று, உரிய பாதுகாப்புடன் பிரசாரம் செய்ய வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை பகுதிகளில் பிரசாரம் செய்யக் கூடாது. ஒலிபெருக்கியைப் பயன்படுத்தாமல், பாக்ஸ் ஸ்பீக்கரை பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே டிஜிட்டல் பேனர்களை வைக்க வேண்டும். கட்சிக் கொடி, தலைவர்களின் உருவபொம்மைகள், சின்னங்களைத் தேர்தல் முடியும் வரை மறைத்து வைக்க வேண்டும். வாகனங்களில் கட்சிக் கொடியைக் கட்டி செல்லக் கூடாது என்றார் அவர். கூட்டத்தில் திமுக, பாமக, தேமுதிக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.