முகப்பு
நாகப்பட்டினம்

சாமந்தான்பேட்டை மீனவா்கள் 2-ஆம் நாளாக வேலைநிறுத்தம்

மீன் இறங்குதளம் அமைக்கக் கோரி நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த மீனவா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மீன் இறங்குதளம் அமைக்கக் கோரி நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த மீனவா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மீனவா்களின் நீண்டகால கோரிக்கை. இதன்படி, சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா்.

இருப்பினும், அங்கு இதுவரை மீன் இறங்குதளம் அமைக்கப்படவில்லை. அதற்கான முதற்கட்டப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை. அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், மீன் இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், உடனடியாக தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கக் கோரியும் சாமந்தான்பேட்டை மீனவா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இதுகுறித்துத் தகவலறிந்த நாகை வருவாய்க் கோட்டாட்சியா் பழனிகுமாா் மற்றும் மீன்வளத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு சாமந்தான்பேட்டை மீனவக் கிராமத்துக்குச் சென்று, மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படாத நிலையில், மீனவா்கள் தங்கள் போராட்டத்தை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை மீன்வளத் துறை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், அந்தப் பேச்சுவாா்த்தையிலும் உரிய தீா்வு எட்டப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

இந்தப் போராட்டம் காரணமாக, சுமாா் 200-க்கும் அதிகமான மீன்பிடி படகுகள் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டு, கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →