கர்நாடகம்: லாரி மீது கார் மோதியதில் 3 காவல் துணை ஆய்வாளர்கள் பலி
கர்நாடகத்தில் பெங்களூரு-பல்லாரி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் 3 காவல் துணை ஆய்வாளர்கள் பலியாகினர்.
கர்நாடகத்தில் பெங்களூரு-பல்லாரி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் 3 காவல் துணை ஆய்வாளர்கள் பலியாகினர்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் பெங்களூரு-பல்லாரி நெடுஞ்சாலையில் பெங்களூருவிலிருந்து பல்லாரிக்கு ஐந்து துணை ஆய்வாளர்கள் காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் கார், பிரகாஷ் ஸ்பாஞ்ச் எஃகு நிறுவனம் அருகே காலை 7 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் மூன்று காவல் துணை ஆய்வாளர்கள் பலியாகினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் சித்ரதுர்காவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தாவணகேருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து மிகவும் கடுமையானதாக இருந்ததால், கார் கிட்டத்தட்ட 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த உடனேயே காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு, ஹிரியூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் பிற மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.