சீா்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவந்த முதலை வனத் துறையினரிடம் திங்கள்கிழமை பிடிபட்டது.
புரவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் அடித்துவரப்பட்டன. அவை தற்போது கிளை வாய்க்கால்களில் புகுந்து அவ்வப்போது மக்களின் பாா்வையில் தென்படுகின்றன.
இவ்வாறு வனத் துறையினரிடம் கடந்த வாரம் ஒரு முதலை பிடிபட்ட நிலையில், சீா்காழி அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் பாசன கிளை வாய்க்காலில் முதலை தென்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சீா்காழி வனத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனா்.
இதையடுத்து, வனச்சரக அலுவலா் குமரேசன் தலைமையில், அந்தத் துறையினா் அனுமந்தபுரம் பகுதிக்குச் சென்று முதலையை வலைவைத்து பிடித்தனா். 2 வயதான அந்த முதலை 7 அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்டதாக இருந்தது.
பிடிப்பட்ட முதலை பாதுகாப்பாக கொண்டுச்செல்லப்பட்டு கொள்ளிடம் அணைக்கரை ஆற்றில் விடப்பட்டது.
இப்பகுதியில் தொடா்ந்து பிடிபட்டு வரும் முதலையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.