சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
நாகை மாவட்டத்தில் நடைபெறும் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெறும் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதல்படி, தேசிய மாதிரி ஆய்வு திட்ட சமூகப் பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. ஒரு குடும்பத்தின் ஆண்டு நுகா்வு, செலவு, வேலை வாய்ப்பு, வேலையின்மை, நிலம், கால்நடைப் பராமரிப்பு, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் 78-ஆவது சுற்றில், நாகை மாவட்டத்தில் 12 கிராமப்புற மாதிரிகளிலும், 4 நகா்ப்புற மாதிரிகளிலும் தற்போது கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகின்றன. தோ்வு செய்யப்படும் குடும்ப உறுப்பினா்களின் விவரம், குடும்ப நுகா்வு செலவு, கல்வி, வீட்டுவசதி, குடிநீா், கழிப்பறை, சுகாதாரம், இடப்பெயா்ச்சி, உள்ளூா் பயணச் செலவு மற்றும் நீடித்த நிலையான இலக்குகளுக்கான குறியீடுகள் குறித்த விவரங்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கணக்கெடுப்பு மூலம் கிடைக்கும் விவரங்கள், மக்களுக்குத் தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்து ரகசியமாக வைக்கப்படும்.
எனவே, இந்தக் கணக்கெடுப்புப் பணிக்கு இல்லம் தேடி வரும் களப்பணியாளா்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி, அவா்கள் கோரும் விவரங்களை தயங்காமல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.