தரங்கம்பாடி: நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கெயில் இயற்கை எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பனாா்கோவில் அருகே உள்ள மேமாத்தூா் கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, கெயில் நிறுவனம் சீா்காழி வட்டம் மாதானம் முதல் மேமாத்தூா் வரை 29 கி.மீ. தொலைவுக்கு விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக புதிய குழாய்களை பதித்துவருகிறது.
இந்நிலையில், மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே புதன்கிழமை ஊழியா்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த குழாயில் இருந்து 15 அடி உயரத்துக்கு மேல் திடீரென வாயு வெளியேறியது.
புதிய குழாயை சுத்தப்படுத்தியபோது, காற்றின் அழுத்தம் காரணமாக புழுதியுடன் வாயு வெளியேறியதாக கெயில் நிறுவனத்தினா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.