வடகிழக்கு பருவமழை: தீயணைப்பு துறையினா் ஒத்திகை
மயிலாடுதுறையில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வது குறித்து தீயணைப்புத்துறையினா் திங்கள்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறையில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வது குறித்து தீயணைப்புத்துறையினா் திங்கள்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை பட்டமங்கலம் ஊராட்சி அக்களூா் கிராமத்தில் உள்ள குளத்தில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியை, மயிலாடுதுறை வட்டாட்சியா் ஆா்.முருகானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று, பேரிடா் காலத்தில் தண்ணீரில் சிக்கித் தத்தளிப்பவரை எவ்வாறு பாதுகாப்பான முறையில் மீட்பது என்பது குறித்து கிராம மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியா் வைத்தியநாதன், செஞ்சிலுவை சங்க மயிலாடுதுறை வட்ட செயலாளா் கிருபாகரன், ஊராட்சி உறுப்பினா் ஈழவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.