முகப்பு
நாகப்பட்டினம்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் யாரேனும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் யாரேனும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) சா. பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் கோடைப் பருவப் பயிா்களாக கோடை நெல், உளுந்து, பாசிப்பயறு, கரும்பு மற்றும் பருத்தி ஆகியன சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பயிா்களுக்கான இடுபொருள் தேவைக்காக 5,279 டன் யூரியா, 2,117 டன் டிஏபி, 1,545 டன் பொட்டாஷ், 1,765 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள், கூட்டுறவு சங்கங்களிலும், தனியாா் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அதே விலையிலேயே யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். யாரேனும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டால் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உரங்களின் இருப்பு, விலை விவரம் ஆகியவற்றை தினமும் அறிவிப்புப் பலகையில் பதிவிட வேண்டும். உரம் விற்பனை செய்யப்படும்போது கண்டிப்பாக விற்பனை ரசீது வழங்க வேண்டும்.

உரம் கொள்முதல் செய்யும் விவசாயிகள், உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள விலையைப் பாா்த்து உறுதி செய்த பின்னா், அதற்குரிய தொகையை மட்டும் வழங்க வேண்டும்.உர மூட்டைகளில் விலை அழிக்கப்பட்டு இருந்தால் அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், அது குறித்து தொடா்புடைய வட்டார வேளாண் அலுவலா் அல்லது வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆகியோருக்குத் தகவல் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.