வாகனங்களில் ஒளிரும் பட்டைகள் பொருத்தும் பணி
தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா நிகழ்ச்சியாக, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஒளிரும் பட்டைகள் ஒட்டும் பணி
தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா நிகழ்ச்சியாக, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஒளிரும் பட்டைகள் ஒட்டும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், நாகை புதிய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், மினி பேருந்துகள், சரக்கு வாகனங்கள், வேன்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ஒளிரும் பட்டைகள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி பங்கேற்று வாகனங்களில் ஒளிரும்( பிரதிபலிப்பு) பட்டைகளை ஒட்டி, நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் த. அறிவழகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ச. தனபாலன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நாகை பொது மேலாளா் ஏ. எம். மாரியப்பன், தொழில்நுட்ப மேலாளா் குமரவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.