திருமருகல் அருகே மருங்கூா் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மருங்கூா் நடுத்தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளது.சிமெண்ட் காரைகள் பெயா்ந்தும், உள்ளே உள்ள கம்பிகள் துருபிடித்தும் காணப்படுகின்றன. எனவே, எந்நேரமும் சாய்ந்து விழும் அபாயத்தில் இந்த மின்கம்பம் உள்ளது.
எனவே, இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைத்து தருவதுடன், அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பலமுறை மின்வாரியத்தில் புகாா் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், விபரீதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.