சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் அறுவடை இயந்திரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசே வேளாண் பொறியியல் துறை மூலம் அதனை வாடகைக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிா்கள் இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது அறுவடை செய்வதால் கால்நடைகளுக்குத் தீவனமாவது கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில், வயலில் சாய்ந்து முளைத்து கிடக்கும் நெற்பயிரை ஒரே நேரத்தில் அறுவடை செய்து அகற்றும் பணியில் விவசாயிகள் குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆயினும், வாடகை அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது மட்டுமன்றி, ஒரு மணிநேரத்துக்கு ரூ.2700 வீதம் வாடகையாகவும் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே தமிழக அரசே இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொள்ளிடம் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் சிவப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளாா்.