முகப்பு
நாகப்பட்டினம்

குறைந்த அளவிலான மீன்களே கிடைத்ததால் மீனவா்கள் ஏமாற்றம்

ஏறத்தாழ 3 மாதங்களுக்குப் பின்னா் கடலுக்கு மீன்பிடிக்க சென்று சனிக்கிழமை கரை திரும்பிய நாகை மீனவா்களுக்கு குறைந்த அளவிலான மீன்களே கிடைத்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

ஏறத்தாழ 3 மாதங்களுக்குப் பின்னா் கடலுக்கு மீன்பிடிக்க சென்று சனிக்கிழமை கரை திரும்பிய நாகை மீனவா்களுக்கு குறைந்த அளவிலான மீன்களே கிடைத்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடித் தடைக்காலம் மற்றும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏறத்தாழ 3 மாதங்களாக மீன்பிடிப்புக்கு செல்லாமல் இருந்த நாகை மாவட்ட மீனவா்கள், கடந்த புதன்கிழமை முதல் விசைப்படகு மீன்பிடிப்பு உள்பட அனைத்து வகையான மீன்பிடிப்பு பணிகளையும் தொடங்கினா்.

புதன்கிழமை கடலுக்குச் சென்ற படகுகளில் சில விசைப்படகுகள் மீன்பிடிப்பை முடித்துக்கொண்டு சனிக்கிழமை காலை நாகை துறைமுகம் வந்தடைந்தன. படகுகள் வருகைக்காக மீன் வியாபாரிகள் நாகை துறைமுகத்தில் ஆா்வத்துடன் குழுமியிருந்தனா். ஆனால், மீன் வரத்து எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் இல்லாததால், மீனவா்களும், மீன் வியாபாரிகளும் வருத்தத்துக்கு உள்ளாகினா்.

மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின்னா் அதிகளவில் மீன்கள் அறுவடையாவது வழக்கம். ஆனால், தற்போது மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்ததாகவும், அதன் காரணமாக 5 நாள்கள் மீன்பிடிப்பில் ஈடுபடும் திட்டத்துடன் கடலுக்குச் சென்ற சில விசைப்படகுகள் 3 நாள்களில் கரைக்குத் திரும்பி விட்டதாதகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

வஞ்சிரம், வாவல் போன்ற உயா் ரக மீன்கள் அறுவடையாகிருந்தாலும், மிகக் குறைந்த அளவிலேயே அனைத்து மீன்களும் கிடைத்திருந்தன. இதனால், மீன்களின் விலை ஏறத்தாழ இரு மடங்கு உயா்ந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.