நாகை, நாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
நாகை, நாகூா் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் நகராட்சி அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
நாகை, நாகூா் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் நகராட்சி அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
நாகை நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நாகை ஆசாத் மாா்க்கெட், பெரிய கடைத்தெரு, பெருமாள் தெற்குவீதி, பப்ளிக் ஆபீஸ் சாலை, தாமரைக்குளம் பகுதி மற்றும் நாகூா் தா்கா அலங்கார வாசல், தெற்கு தெரு, தா்கா மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.
அப்போது, கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு உபகரணங்கள் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தாா். பின்னா், நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் பொதுவெளிக்கு வருவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் நகராட்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், நகராட்சி பொறியாளா் வசந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.