நாகை அருகே அரசு வாகனத்தில் ரூ. 50 ஆயிரம் மதுபாட்டில்கள் கடத்தல்: ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் 2 போ் கைது
தமிழ்நாடு அரசு வாகனத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் இருவரை, நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசு வாகனத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் இருவரை, நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) சரவணன் ஆகியோரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் எஸ். ஆரோக்கிய டூனிஷ் மேரி, உதவி ஆய்வாளா் எஸ். ரமேஷ் ஆகியோரது தலைமையில் திட்டச்சேரி அடுத்த நடுக்கடை பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற, தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்குச் சொந்தமான வாகனத்தை சோதனையிட்ட போது, அதில், 180 மி.லி. கொள்ளளவு கொண்ட 200 சாராய பாட்டில்கள், 143 மது பாட்டில்கள், 750 மி.லி., கொள்ளளவு கொண்ட 4 மது பாட்டில்கள் என சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 347 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மதுபாட்டில்கள் மற்றும் அரசு வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மதுபாட்டில்களை அரசு வாகனத்தில் கடத்திவந்த நாகை மாவட்டம், கீழ்வேளூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ச. ராஜேந்திரன் (55), ரயிலடி தெருவைச் சோ்ந்த தை. அம்பிகாபதி (58) ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா்.
இதில், அவா்கள் இருவரும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள் என்பதும், இதில், ச. ராஜேந்திரன் பணி ஓய்வுக்குப் பிறகு, நாகையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய நிலையில், மதுகடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, ச. ராஜேந்திரன், தை. அம்பிகாபதி ஆகியோரை கைதுசெய்த போலீஸாா், காரில் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் அரசு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.