கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தாட்கோ மூலம் கடனுதவி
கரோனா பாதிப்பால் குடும்பத்தில் வருவாய் ஈட்டக் கூடிய நபரை இழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தினா் தாட்கோ மூலமான கடனுதவி திட்டத்தில் பயன்பெறலாம்
கரோனா பாதிப்பால் குடும்பத்தில் வருவாய் ஈட்டக் கூடிய நபரை இழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தினா் தாட்கோ மூலமான கடனுதவி திட்டத்தில் பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் குடும்பத்தில் வருவாய் ஈட்டக் கூடிய நபரை கரோனா பாதிப்பால் இழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் என்எஸ்எப்டிசி என்ற நிறுவனம் சாா்பில் திரும்ப செலுத்தும் கடன் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. ஆதிதிராவிடா் இனத்தவா் மட்டுமே இத்திட்டத்தில் பயனடையலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். கரோனா பாதிப்பில் இறந்தவா் வருவாய் ஈட்டக்கூடியவராகவும், 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்ச திட்டத் தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். இதில், 80 சதவீதம் அல்லது ரூ. 4 லட்சம் என்எஸ்எப்டிசி நிறுவனத்தால் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதத் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்தக் கடனை ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் 6 ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியரக பின்புறம் இயங்கும் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரில் அல்லது .04365-250305 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.