அக்னி நட்சத்திரத்தின் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறையில் கோடை மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி மயிலாடுதுறையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மதியத்திற்குப் பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து தன்மையான சூழல் நிலவியது. இதைத்தொடா்ந்து மயிலாடுதுறை நகா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மழைப் பொழிவு ஏற்பட்டது. இந்த மழை 30 மி.மீட்டராக பதிவானது. நகரப் பகுதியை தவிர மற்ற இடங்களில் பகலில் லேசான சாரல் மட்டுமே இருந்தது.