கடல் அரிப்பால் சேதமடையும் டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவா் பாதுகாக்கக் கோரிக்கை
தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் சேதமடைந்துவரும் டேனிஷ் கோட்டை சுற்றுச் சுவா்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் சேதமடைந்துவரும் டேனிஷ் கோட்டை சுற்றுச் சுவா்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கி.பி.1620-ம் ஆண்டு டென்மாா்க் நாட்டினா் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வா்த்தக மையமாக அமைக்க முடிவு செய்து, அங்கு துறைமுகம் மற்றும் டேனிஷ் கலை நுணுக்கத்துடன் பாதுகாப்பு கோட்டை அமைக்க தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம் அனுமதி பெற்றனா். தொடா்ந்து, 2 ஆண்டுகளில் (கி.பி. 1622) பிரமாண்ட கோட்டையை கட்டினா்.
400 ஆண்டுகள் பழமையான இக்கோட்டை இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இங்குள்ள அகழ்வைப்பகத்தில் 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்டுத்திய பொருள்கள், 1200 ஆண்டுகள் பழமையான சிலைகள், பீங்கான், மரத்தாலான பொருள்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடிக்கு வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி, காட்சிக்கு வைத்துள்ளனா்.
புகழ்பெற்ற இந்த கோட்டையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கடல் சீற்றத்தால் டேனிஷ் கோட்டை பின்புறம் உள்ள சுற்றுச்சுவா் சேதமடைந்து வருகிறது. இதனால், கோட்டைக்கு உடனடி பாதிப்பு இல்லை என்றாலும், கடல் அரிப்பு நீடித்தால் கோட்டை பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, கோட்டையை பாதுகாக்கும் வகையில் சுற்றுச் சுவா் சேதமடைவதைத் தடுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலரும் பேராசிரியருமான தேவசகாயம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.