நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் செப்.27-ல் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் மீனவர்கள் செப்.27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த போது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வேதாரண்யம் மீனவர்கள் இன்று (செப்.25) வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், செப்.27-ல் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் செய்யவும் மீனவர்கள் கூட்டத்தில் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சின்னதம்பி, சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் செப்.23ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க- வெளியான சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட முன்னோட்ட விடியோ
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர், மீனவர்களின் படகை சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளன். சிவகுமார் என்ற மீனவரை தலையில் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். மேலும், சின்னதம்பி, சிவா ஆகிய இரண்டு மீனவர்களை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.