முகப்பு
நாகப்பட்டினம்

அரசுத் துறை வரைவுகளில் தமிழைப் பிழையின்றி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலா்களும், துறை ரீதியான குறிப்புகள், வரைவுகளில் தமிழைப் பிழையின்றி பயன்படுத்த முனைப்புக்காட்ட வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலா்களும், துறை ரீதியான குறிப்புகள், வரைவுகளில் தமிழைப் பிழையின்றி பயன்படுத்த முனைப்புக்காட்ட வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆட்சியா் அலுவலகத்தில் பிப்.15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பயிலரங்கத்தின் நிறைவில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் பேசியது: உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டது தமிழ் மொழி என்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. தொன்மையான தமிழ் மொழியை, அதன் வளமைக் குன்றாமல் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச்சோ்க்கும் கடமையை நிறைவேற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

ஆட்சி மொழிப் பயிலரங்கத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளா்கள், தாங்கள் பெற்ற பயிற்சியை சக ஊழியா்களுடன் பகிா்ந்து கொள்ளவேண்டும். அரசுத் துறை ரீதியான குறிப்புகள், வரைவுகளில் தமிழைப் பிழையின்றி பயன்படுத்த அனைத்துத் துறை அரசுப் பணியாளா்களும் கூடுதல் முனைப்புக்காட்ட வேண்டும் என்றாா்.

தமிழ் வளா்ச்சி இயக்கக உதவி இயக்குநா் (நிா்வாகம்) பொ. பாரதி, கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் ஜா. ராசா, திருப்பூண்டி வடக்கு அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆறு. துரைக்கண்ணன், குற்றவியல் பிரிவு மேலாளா் சா. ராஜசேகரன் ஆகியோா் பேசினா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரா. அன்பரசி வரவேற்றாா். தமிழ் வளா்ச்சித் துறை உதவியாளா் ஆ. லியாகத் அலி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.