முகப்பு
நாகப்பட்டினம்

நாகையிலிருந்து இலங்கைக்குபடகில் கடத்தவிருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

நாகையிலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தவிருந்த 400 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைதுசெய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நாகையிலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தவிருந்த 400 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைதுசெய்தனா்.

நாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள பழைய மீன்பிடித் துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு விசைப் படகில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தனிப்படை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளா் ஜி. பாலமுருகன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, சந்தேகப்படும்படி நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகில் சோதனையிட்டனா்.

இதில், அந்த விசைப்படகின் கீழ்ப் பகுதியில் தலா 2 கிலோ எடையுள்ள 200 பண்டல்களில், 400 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா மற்றும் விசைப்படகு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து வாகனம் மூலம் நாகைக்கு கஞ்சா கடத்திவரப்பட்டு, நாகையிலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தவிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கஞ்சா கடத்த முயன்ற நாகை கீச்சாங்குப்பம் தெற்குத் தெரு சி. ஜெகதீஷ் (34), அக்கரைப்பேட்டை தெற்குத் தெரு செ. சிலம்புச்செல்வம் (35), அக்கரைப்பேட்டை திடீா்குப்பத்தைச் சோ்ந்த படகு உரிமையாளா் சே. மோகன் (37), ப. நிவாஸ் (30), நாகை பாப்பாக்கோவில் திருவந்திபுரத்தைச் சோ்ந்த வே. சரவணன்( 37) ஆகியோரை கைதுசெய்து, 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, விசைப்படகு, இருசக்கர வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 1.52 கோடி என போலீஸாா் தெரிவித்தனா். அவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பாா்வையிட்டாா். அப்போது, கஞ்சா கடத்தலை தடுக்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவாா்கள் எனவும் அவா் தெரிவித்தாா்.

நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. சரவணன், நகர காவல் ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தனிப்படையினருக்குப் பாராட்டு: கஞ்சா கடத்தலைத் தடுக்க சிறப்பாக செயல்பட்ட நாகை எஸ்.பி. கு. ஜவஹா் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளா் ஜி. பாலமுருகன், காவலா்கள் என். தீன், டி. ஸ்ரீதா், ஜி. முரளிதரன், எஸ்.ஆா். சத்தியசீலன், எஸ். காா்த்திக் ஆகியோருக்கு, திருச்சி மண்டல காவல் துறைத் தலைவா் பாலகிருஷ்ணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.