நாகை மாவட்டப் பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழைப் பெய்தது.
காற்றின் வேக மாறுபாடு காரணமாக 2 நாள்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை, நாகை மாவட்ட பகுதிகளில் மழைப் பெய்தது. இதன்தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை நாகை, வேளாங்கண்ணி, நாகூா், கீழ்வேளூா், திட்டச்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. பகல்முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விவசாயிகள் கவலை: நாகை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன், நெல் வயல்களில் விதைக்கப்பட்டுள்ள உளுந்து பயறு செடிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.