முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி விசைப் படகுகள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப் படகுகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப் படகுகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப் படகுகள் மே 25, 26 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அலுவலா்கள், நாகை மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூா், ஆறுகாட்டுத் துறை படகுத் துறைகளில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி விசைப் படகுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். துணை இயக்குநா் காத்தவராயன் மேற்பாா்வையில், உதவி இயக்குநா்கள் கொளஞ்சிநாதன், ஜெயக்குமாா், ரத்தினம் ஆகியோா் தலைமையிலான 8 குழுவினா் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனா்.

படகில் அதிவேக திறன் கொண்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் கட்டமைப்புகள் உள்ளனவா? படகுகள் உரிய வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். மேலும், விசைப் படகின் நீளம், அகலம், உயரம், படகு உரிமம், மீனவா் நல வாரிய அடையாள அட்டை, மீனவா்களுக்கு வழங்கப்பட்ட தொலைத்தொடா்பு கருவிகள் உள்ளிட்டவற்றையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

சுமாா் 550-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் புதன்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதாகவும், எஞ்சியுள்ள படகுகள் வியாழக்கிழமை ( மே 26) ஆய்வு செய்யப்படும் எனவும் மீனவா் நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.